kanimozhi relieved from 2G spectrum case and karunanidhi happy

நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கிலிருந்து ஆ.ராசா மற்றும் கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 2004-2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில், முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.

2ஜி முறைகேடு வழக்கை கடந்த 7 ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. நாட்டையே உலுக்கிய வழக்கு என்பதால், இந்த வழக்கின் தீர்ப்பு ஒட்டுமொத்த தேசத்தாலும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி.ஷைனி தீர்ப்பளித்தார். அப்போது, 2ஜி முறைகேடு வழக்கில் குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்க சிபிஐ தரப்பு தவறிவிட்டதாக கூறி, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் என அனைவரையும் விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

2ஜி வழக்கின் தீர்ப்பை திமுகவினர் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில், கோபாலபுர வீட்டில் ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியிடம் அவரது உதவியாளர் சத்யா, 2ஜி வழக்கிலிருந்து கனிமொழி உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.

உடல்நலம் குன்றி இருக்கும் கருணாநிதி, இந்த செய்தியை உற்று கவனித்துவிட்டு புன்னகையை உதிர்த்திருக்கிறார்.