கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்த நாள்... புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி..!
கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்ணுரிமை ஆகியவற்றில் காமராஜர் வலியுறுத்தியவை இன்றளவும் இந்திய மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்ணுரிமை ஆகியவற்றில் காமராஜர் வலியுறுத்தியவை இன்றளவும் இந்திய மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
காமராஜர் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். பெருந்தலைவரின் வாழ்நாளில் அவருடைய பொதுத்தொண்டு காலம் 55 ஆண்டுகள். இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக 12 ஆண்டுகள். தமிழக முதல்வராக 9 ஆண்டுகள். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 5 ஆண்டுகள். நாடாளுமன்ற உறுப்பினராக சுமார் 12 ஆண்டுகள். சட்டமன்ற உறுப்பினராக 16 ஆண்டுகள் இருந்தார். 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்த இவர் பொற்கால ஆட்சி நடத்தினார்.
தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கிங் மேக்கர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராஜர் மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் தலைவராக விளங்கினார். தமிழக அரசியல் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் அவர் கிங் மேக்கராகத் திகழ்ந்தார்.
இன்று காமராஜரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய சிலைக்கு மரியாதை செலுத்தியும், ட்விட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி கர்மவீரர் காமராஜை புகழ்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மாபெரும் தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துகிறேன். அவர் தனது வாழ்க்கையை தேசிய வளர்ச்சி மற்றும் சமூக வலுவூட்டலுக்காக அர்ப்பணித்தவர். கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்ணுரிமை ஆகியவற்றில் அவர் வலியுறுத்தியவை இன்றளவும் இந்திய மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது என கூறியுள்ளார்.