இடைத் தேர்தல் தொகுதியை விட்டுக்கொடுத்த அதிமுக !! தொண்டர்கள் அதிர்ச்சி !!
புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் அதிமுக போட்டியிடாமல் கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்துள்ளது.
புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்மாநில சபாநாயகராக இருந்த வைத்தியலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அத்தொகுதி காலியாக இருந்து வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளோடு புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதிக்கும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
திமுக கூட்டணியில் காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அங்கு அதிமுக போட்டியிடுகிறதா அல்லது யாருக்கேனும் ஆதரவளிக்கிறதா என்பது தெரியாமலேயே இருந்துவந்தது.
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், காமராஜர் நகர் இடைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை இன்று நடைபெற்றது.
அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு காமராஜர் நகர் தொகுதியை ஒதுக்கீடு செய்வது என முடிவெடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக, காமராஜர் நகர் இடைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, விருப்ப மனுக்களையும் பெற்று வந்தது. இதனால் அந்தத் தொகுதியில் அதிமுக ஆதரவுடன் பாஜக போட்டியிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக என்.ஆர்.காங்கிரஸுக்கு காமராஜர் நகர் தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளது.