ராஜபக்சேவை ஆதரிக்கும் கமல்ஹாசன் !! இன்னும் வேற பாக்கி இருக்கா ?
இலங்கை பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளதை மக்கள் நீதி மய்யம் கட்சி வரவேற்கவில்லை என்றாலும், அவர், தமிழ் மக்களிடம் முன்பு போல் நடந்து கொள்ள மாட்டார் என்று நம்புவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபரான சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதே நேரத்தில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் இலங்கை அரசில் இருந்து சிறிசேனா கட்சி விலகியது. இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது
சிறிசேனாவின் அறிவிப்பை நிராகரித்த ரனில் விக்ரமசிங்கே, தனக்கு போதுமான எண்ணிக்கை இருப்பதாகவும், உடனே நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கை பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றதை அங்குள்ள தமிழர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின், வைகோ, பழ.நெடுமாறன், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். பாஜக எம்.பி. சுப்ரமணியன்சாமி மட்டுமே இதனை வரவேற்றுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இலங்கை பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளதை மக்கள் நீதி மய்யம் கட்சி வரவேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் ராஜபக்சே தமிழ் மக்களிடம் முன்பு போல் நடந்து கொள்ள மாட்டார் என்று நம்புவோம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தமிழக மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.