Kamalhassan press meet

தமிழ்தாய் வாழ்த்து இருக்கும் வரை திராவிடத்தை அழிக்க முடியாது…பொங்கித் தீர்த்த கமல்ஹாசன்…

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திராவிடம் என்பது நாலயிரதிவ்ய பிரபந்தம் தொடங்கி தொன்று தொட்டு இருந்து வருகிறது என்றும், தமிழ்தாய் வாழ்த்து இருக்கும் வரை அதை யாராலும் அழிக்கமுடியாது என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் கமல் ஹாசன் இன்றைய அரசியல், சமுதாயம், சினிமா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினார்.

அப்போது ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமையும் , பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது என தெரிவித்தார். அதே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெளிப்படைத் தன்மையுடன் செயல்படாமல் இருந்திருக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது எரிமலையின் ஒரு நுனிதான் என்றும் தவறுகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்றும் கமலஹாசன் தெரிவித்தார்.

நான் முறையாக வரி கட்டுகிறேன். ஒருபோதும் ஊழலில் ஈடுபட்டதில்லை அதே நேரத்தில் வாக்குகளுக்கு பொது மக்கள் விலை போகும் போது அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க முடியாது என்று கமல் கூறினார்.

அரசின் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக மக்கள் விரும்பாத அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது அவசியமில்லை என்று தெரிவித்த கமல்ஹாசன், தமிழக சட்டப் பேரவைக்கு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறினார்.

எனக்கென்று தனியாக தலைவர்கள் யாரும் கிடையாது, காந்தி, பெரியார் மாதிரியான ஹீரோக்கள் தான் உள்ளனர் என்றும் அதற்கு காரணம் இருவருமே தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்தார்.

கொள்கை என்பது காலத்திற்கேற்ப மாறுபடும் என்றும் காலத்தின் தேவையாக இருந்ததால் தான் திமுக அதிமுக போன்ற இயக்கங்கள் உருவெடுத்துள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.