இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும்.. அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும்.. கமல்ஹாசன் ஆவேசம்..!
சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் தலித் கிராமத்தில் கடந்த 9 முதல் 12ம் தேதி வரை மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் ஆடல், பாடலுடன் பாட்டுக்கச்சேரி நடந்தது. இதுபற்றி மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சென்று பாட்டுக் கச்சேரி நடத்தியவர்களை எச்சரித்துவிட்டு, ஒலிபெருக்கி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து காவல் நிலையத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பொருட்களையும் பெற்றுச் சென்றனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக இருபிரிவினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய பஞ்சாயத்து பேசப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்த 3 பேர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று கூறியதையடுத்து 3 பேரும் பஞ்சாயத்தார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதைத்தொடர்ந்து மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் 2 பேரை நேற்று கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவாகி உள்ளனர். இதற்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, கமல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்கும், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மனப்பாடப் பாட்டு கற்பிக்கும் தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா?
திருவிழா கொண்டாடியதற்காக சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும். அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும்" என பதிவிட்டுள்ளார்.