போலீசால் கடைசி நேரத்தில் மிஸ்ஸான கல்யாண ராமன்... மொத்தமாக கை கழுவிய கோர்ட்...
தொடர்ந்து சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்,
தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறுகளையும் சர்ச்சை கருத்துக்களையும் வெளியிட்டு வந்ததாக கூறி கைது செய்யப்பட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனின் ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது கல்யாணராமன் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜக செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கல்யாணராமன், சர்ச்சைக்கு பெயர் போன இவர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் மிக தரக்குறைவாகவும், இழிவாகவும் சமூக வலைதளத்தில் விமர்சித்து வந்தார்.தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக இவர், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வையும், மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கருத்து பதிவிட்டு வந்ததாக கூறி சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
அதேபோல முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் பிரமுகர்களை அவதூறாவும், இழிவாகவும் கருத்து பதிவிட்டு வந்ததாக கல்யாணராமன் மீது புகார்கள் குவிந்தது. இதையடுத்து கடந்த 16 ஆம் தேதி நள்ளிரவில் சென்னை வளசரவாக்கம் தேவி குப்பம் அன்பு நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார், அதன் அடிப்படையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது,
அவருக்கு ஏற்கனவே ஜார்ஜ்டவுன் பெருநகர குற்றவியல் மூன்றாவது நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததை அடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது, அந்த மனுமீதான விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் இன்று வந்தது, ஆனால் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் ஒரு ஆண்டுக்கு பிணை கிடைக்க வாய்ப்பில்லை என்ற சூழல் உருவாகி உள்ளது.