kadar moideen meet stalin and gave support to marudhu ganesh
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், இந்த இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேணதான் ஜெயிக்கபோகிறார் எனவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார்.
திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலினை, அவரது இல்லத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேரில் சந்தித்தார்.
ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தும், வெற்றிபெறவும் வாழ்த்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருதுகணேஷ் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. விருது பெறும் கணேசாக மாறுவார் என்று தெரிவித்தார்..
2001 முதல் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெற்று வந்தது. இப்போது இந்த நிலை மாறி எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார் என்ற வரலாறு சாதனை உருவாகும் என்றும் காதர் மொய்தீன் கூறினார்.
பா.ஜ.க.வின். கொள்கைகள், ஆட்சிமுறைகள் மக்களால் வெறுக்கப்பட்டு வருகிறது. அந்த கட்சியை சேர்ந்த தலைவர்களே இதை வெளிப்படுத்தி வருகிறார்கள். நண்பர் தொல் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவை கொடுக்கும் என்று அறிவித்திருக்கிறார்.
அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இடதுசாரி தோழர்களும் மற்றும் பிற கட்சியினரும் ஆதரித்து திமுக வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றும் காதர் மொய்தீன் கேட்டுக் கொண்டார்..
