விரைவில் நல்ல முடிவு வரும் - பழைய பஞ்சாங்கத்தை தொடங்கும் கடம்பூர் ராஜு...!!
ஒபிஎஸ் அணியின் இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுள்ளதை அவர்கள் வரவேற்பதாகவும், அணிகள் இணைப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் எனவும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நாள் முதலே ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் என ஒபிஎஸ் முழக்கமிட்டு வருகிறார்.
அதனால் நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் ஜெ வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
அதன்படி சென்னையில் இன்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தினார். இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து ஜெ சமாதியில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. காரணம் பிரிந்த இடத்திலேயே ஒன்று சேர உள்ளதாக தகவல் வெளியாகியது.
நேற்று மாலை 7.30 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்தில் இணைந்து அதிமுக இணைப்பு குறித்த தகவலை வெளியிடுவதாக தகவல் வெளியாகியது.
ஆனால் ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஒபிஎஸ் அணியின் இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுள்ளதை அவர்கள் வரவேற்பதாகவும், அணிகள் இணைப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்து இரட்டை இலையை மீட்டெடுப்போம் எனவும், ஓரிரு நாளில் நல்ல முடிவு வரும் எனவும் தெரிவித்தார்.