திமுக தேர்தலுக்கு ரெடியா இருக்கு இது ஊருக்கே தெரியுமே... பாயிண்ட்டை பிடித்து அடித்த கி.வீரமணி...
20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்தாமல், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுவது ஏன் என்று கி.வீரமணி, கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவால் காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதிக்கு, வரும் 28ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்துவிட்டன. 20 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது ஏன் சந்தேகம் அரசியல் அரங்கில் வலுத்து வருகிறது.
இதுதொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “ 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தாமல் திருவாரூருக்கு ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதில் மட்டும் தனித்த அக்கறை காட்டுவதன் நோக்கம் தான் என்ன” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“மழை பெய்யும் ஆகவே தள்ளி வையுங்கள் என்று தமிழக அரசு முன்பே தனது தலைமைச் செயலாளரை விட்டு தேர்தல் ஆணையத்துக்கு எழுதியது போல, இப்போது மழை-புயல் முடிந்து விட்டது உடனே வையுங்கள் என்று கடிதம் ஏதாவது போனதா” என்று சந்தேகம் தெரிவித்துள்ள வீரமணி, “திமுகவைப் பொறுத்தவரை அது என்றும் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறது என்பது நாடறிந்த உண்மையே.
20 தொகுதிகளுக்கு தேர்தல் வைக்காமல் இதற்கென்ன தனி அவசரம்? அவற்றையும் சேர்த்து குட்டிப் பொது சட்டப்பேரவை தேர்தல் போன்று நடத்தினால், ஜனநாயகம் மேலும் காப்பாற்றப்படுவதுடன் இடைத்தேர்தல்கள் மட்டுமல்லாமல் தமிழக ஆட்சியாளருக்கு எடைத் தேர்தல்களாகவும் கூட உணர்த்தும் தேர்தல்களாக இருக்குமே” என்று வலியுறுத்தியுள்ளார்.