துணைப் பேராசிரியராக மட்டும் பணிபுரியும் சந்திரசேகர் என்பவர் எப்படி இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் வட்டாரத்தில் புரியாத பெரும் புதிராக உள்ளது. காவிக் கட்சியின் கண்ணோட்டமோ என்றும் பேசப்படுகிறது; காரணம், இவர் பேராசிரியரோ, துணைத் தலைவரோ இல்லை. அதோடு அனுபவமும் மிகவும் குறைவே! 

செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்குத் தகுதியுள்ள பேராசிரியர் தாமோதரனை தேர்வு செய்யாதது ஏன்? தகுதியில்லாத ஒருவர் பி.ஜே.பி. சார்பாளர் என்பதற்காக நியமனமா? தமிழக அரசு உடனே தலையிடவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.


சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மய்ய நிறுவனத்தின் இயக்குநராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியா ட்விட்டரில் தெரிவித்தார். இத்தகவலை பிரதமர், உள் துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோருடன் சேர்ந்து நடிகர் ரஜினியையும் ட்விட்டரில் ‘டேக்’ செய்தது சர்ச்சையானது. இந்நிலையில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள சந்திரசேகரன் தகுதியற்றவர் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். 
அதில், “மைசூரில் இயங்கி வந்த இந்திய மொழிகள் மைய நிறுவனத்தில் தமிழ் ஆய்வுக்குரிய மொழியாகவும், பிற மொழியாளர்களுக்குக் கற்பிக்கும் மொழியாகவும் வழங்கப்பட்டு வந்தது. தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, மத்திய அரசில் திமுகவும் இடம்பெற்ற வாய்ப்பை பயன்படுத்தி, தமிழுக்கு ‘செம்மொழி’ தகுதியைப் பெற்றதோடு, மைசூரில் இயங்கி வந்த அந்த மத்திய நிறுவனத்தின் அலுவலகம் சென்னைக்கு மாறுதலாகும்படியும் செய்தார். தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை சிறந்த தமிழ் ஆய்வாளருக்கு ஆண்டுதோறும் விருது வழங்க அறக்கட்டளை அமைக்கவும் அந்த நிறுவனத்திற்கு உதவினார்.
கடந்த 13 ஆண்டுகளாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிரந்தரமாக யாரும் நியமிக்கப்படவில்லை. ஐஐடி என்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரிகளே (தமிழுக்கும் அவர்களுக்கும் காத தூரம்) பொறுப்பு இயக்குநர் பதவியை வகித்து வந்தனர். நாம் பலமுறை இதைச் சுட்டிக்காட்டி, அறிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டங்களும் செய்தோம். இப்பொழுது தேசிய தொழில்நுட்பக் கழகப் (NIT) பேராசிரியர் பழனிவேல் பொறுப்பில் உள்ளார்! தற்போது இவ்வாண்டு ஜூன் மாதம் செம்மொழி மத்திய இயக்குநராக முனைவர் சந்திரசேகரன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதாக செய்தி வந்துள்ளது. இப்பதவிக்குரிய ஆய்வு மற்றும் சிறப்புத் தகுதிகள் - அனுபவம்பற்றி கவலைப்படாமல் - இப்பதவிக்கு இவரைத் தேர்வு செய்துள்ளதாகவும், இவர் கல்லூரி ஒன்றில் துணைப் பேராசிரியராகவும் - காவிக் கட்சியின் ஆதரவாளராகவும், அனுதாபியாகவும் இருப்பதால் - இப்பரிசு என்றும் கல்வியாளர்கள் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன. இவருடன் நேர்காணலுக்கு இயக்குநர் பதவிக்குச் சென்றவர்கள் பற்றிய செய்திகளும் வெளிவரவில்லை.


இதன் வெளிப்படைத்தன்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும். நீதிமன்றங்களுக்குச் சென்றால், இந்த நியமனம் நிலைக்குமா என்பது ஒருபுறமிருந்தாலும், கருணாநிதி உருவாக்கிய செம்மொழி தமிழ் நிறுவனத்தில் இப்படி ஓர் அவலமா என்பது வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாக உள்ளது! இதற்கு உரிய பரிகாரம் தேவை! இப்பிரச்சினை மேலும் ‘பூதாகரமாக’ வெடித்து மக்கள் கிளர்ச்சி - மாணவர்கள் கிளர்ச்சிகளுக்குச் சென்றுவிடாது, தமிழக அரசு தலையிட்டு, நியாயம் வழங்கட்டும்” என்று தெரிவித்தார்.