சசிகலாவை நீக்குவதாக கூறியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்: டிடிவி தினகரன்
தமிழக அரசியலில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அணிகள் இணைப்புக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் இன்னும் சூடுபிடித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாபஸ் பெற்ற பின்னர், புதுவையில் தங்கி உள்ளனர். புதுவை ரிசார்ட்டில் தங்கியுள்ள ஆதரவு எம்எல்ஏக்களை, டிடிவி தினகரன் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், டிடிவி தினகரன் சென்னை, அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தான் திருப்பூரில் நடைபெறும் திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள செல்கிறேன்.
புதுவையில் 19 பேர் சென்றிருக்கிறார்களே என்றால், இவர்கள் பயந்து கொண்டு செல்லவில்லை. மாபெரும் மக்கள் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற தியாக உணர்வோடு சென்றுள்ளனர்.
இந்த நிகழ்வை, தமிழகம் மாத்திரமல்ல, இந்திய துணை கண்டமே இதனை உற்று கவனித்து வருகிறது. ஆளுநர் வித்யாசாகர் ராவ், 20 சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருவார் என்றே அவர்கள் அங்கே அமர்ந்துள்ளனர்.
தியாகத்துக்காக போராடுகின்ற அந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அந்த (எடப்பாடி பழனிசாமி) அணியிலே இருந்திருந்தால் அவர்களுக்கு எந்தெந்த சலுகைகள் கிடைத்திருக்கும்.
பொது செயலாளரை நீக்குவேன் என்று கூறியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அங்கு தங்கியுள்ளனர். அவர்கள் தர்மத்தின் பக்கம் உள்ளனர். நியாயம் நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.