justice k.t.thomas write a letter to sonia
ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு அவர்களது தண்டைனையை குறைக்க கருணை காட்டுங்கள் என்று அந்த கொலை வழக்கை விசாரித்து, தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி கே.டி. தாமஸ், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 18 பேர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 26 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு தலைமை வகித்து தற்போது ஓய்வு பெற்றுள்ள நீதிபதி கே.டி. தாமஸ், சோனியாவுக்கு கடந்த அக்டோபர் 18ம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் தண்டனையை குறைத்து விடுதலை செய்ய 2014ம் ஆண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்த போது, அதனை மத்திய அரசு எதிர்த்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை சிறைச்சாலையிலேயே கழித்துவிட்ட அவர்களது தண்டனையைக் குறைக்க ஒப்புதல் அளிப்பதாக ஒருவேளை நீங்களும், ராகுலும், குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினால், மத்திய அரசும், குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க அனுமதிக்கும் என தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்

இது மனிதநேயத்தோடு அணுக வேண்டிய , உங்கள் ஒருவரால் மட்டுமே உதவக் கூடிய விஷயமாக உள்ளது. ஒரு நீதிபதியாக, இந்த நபர்களுக்கு எதிராக நான் தீர்ப்பை வழங்கியிருந்தாலும், தற்பொழுதிருக்கும் சூழ்நிலையில், உங்கள் கருணையைக் கேட்டு கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவர்கள் மீது கருணைக் காட்ட எல்லாம் வல்ல கடவுள்தான் அருள்புரிய வேண்டும். நான் இந்த கடிதத்தில் ஏதேனும் தவறாகக் கூறியிருந்தால் மன்னித்துவிடுங்கள் என்றும் தாமஸ் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்
