justice karnan write auto biagraphy

நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன், தனது சுயசரிதையை எழுதி வருகிறார்.

இது குறித்து அவருடைய வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ் குமார், ‘தி இந்து’ ஆங்கிலப்பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

சுயசரிதை

‘‘வியாழக்கிழமை அன்று பிரசிடன்ஸி சிறையில் நீதிபதி கர்ணனைச் சந்தித்தேன்.கர்ணன் தன்னுடைய வாழ்க்கை குறித்த சுயசரிதையை எழுதி வருகிறார்.

அதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அவர் பிறப்பித்த உத்தரவுகள் குறித்த பகுதியும் இணைக்கப்படும்.

நீதித்துறை சீர்திருத்தம்

கர்ணன் நீதித்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான தனது ஆரம்பகட்ட நடவடிக்கையாக இதைப் பார்க்கிறார்.

அந்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டனவா, இல்லையா என்பது இங்கு முக்கியமில்லை.

‘டிசம்பரில் வெளியீடு’

அவரின் சுயசரிதையில் முக்கால்வாசி முடிந்துவிட்டது. ஆறு மாத கால சிறை தண்டனை பெற்றுள்ள கர்ணன், தண்டனைக் காலம் முடிந்து டிசம்பர் 20-ல் வெளியே வருகிறார். அப்போதே புத்தக வெளியீடு இருக்கும்.''

இவ்வாறு அவர் கூறினார்.

சிறைத் தண்டனை ஏன்?

தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், தன் பதவிக்காலத்தில் சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், கர்ணன் கைது செய்யப்பட்டு 6 மாத சிறை தண்டையில் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

----