பச்சை தண்ணி குடித்துவிட்டு பல்குத்தும் காங்கிரஸ்.. 200 தொகுதியில் போட்டியிடுவோம் என சவடால்.. அழகிரி அலப்பறை .
சமூகநீதிக்கு எதிரான சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே இத் தேர்தலில் காங்கிரசின் இலக்கு. கன்னியாகுமரி மக்களவைத் இடைத்தேர்தல் தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு மாற்று கட்சி காங்கிரஸ் மட்டும்தான், ஏன் வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம் ஆனால் மதசார்பின்மை வெற்றிபெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். திமுக உடனான தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இருபது நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு செய்வது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக தேமுதிக இடையே இன்னும் கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.
திமுக ஓரளவுக்கு தனது கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து கூட்டணியை பேச்சு வார்த்தையை வெற்றிகரமான நடத்தி வரும்நிலையில், காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தையிலும் தற்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக உடனான தொகுதி பங்கீடு முழு திருப்தி அளிக்கிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும். தமிழகத்தில் பாஜக காலூன்ற கூடாது, அதிமுக வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
சமூகநீதிக்கு எதிரான சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே இத் தேர்தலில் காங்கிரசின் இலக்கு. கன்னியாகுமரி மக்களவைத் இடைத்தேர்தல் தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய நோயாக பாஜக வளர்ந்து வருகிறது. அதை தமிழகத்தில் நுழையவிடக் கூடாது என்பதே காங்கிரஸின் நோக்கம் எனக் கூறினார். 41 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில் 25 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியலில் ஏற்ற இறக்கங்கள் என்பது இயல்புதான். ஏன் வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம், ஆனால் மதச்சார்பின்மை வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே திமுகவுடன் கைகோர்த்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.