மீண்டும் அதிரடி திருப்பம் … அறுதிப் பெரும்பான்மையை எட்டிப் பிடிக்குமா காங்கிரஸ் கூட்டணி !!
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து அறுதிப் பெரும்பான்மை இடத்தை காங்கிரஸ் கூட்டணி பெறுமா ? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர்தாஸ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 81 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும், பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெறிருந்தது. நேரம் செல்ல செல்ல காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்தது. பின்னர் மீண்டும் தற்போது காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.
மொத்தம் உள்ள 81 இடங்களில் 81 இடங்களுக்கு முன்னிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களிலும், பாஜக 30 இடங்கிளிலும், ஜெஎம்வி 3 இடங்களிலும் மற்றவை 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது,