புனிதம் கெட்டுவிட்டது...! கொந்தளிக்கும் சசி கேங்...!
போயஸ்கார்டனில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதைதொடர்ந்து ஜெயலலிதா இல்லத்தின் புனிதம் கெட்டுவிட்டது எனவும் ஜெயலலிதாவை ஒரு குற்றவாளியை போல் அரங்கேற்றவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் டிடிவி தினகரன் ஆதரவாளர் வி.பி.கலைராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த 9 ஆம் தேதி சசிகலா உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நிறுவனம் என பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை 6 நாட்களுக்கு மேலாக நீடித்தது. இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சற்று நேரத்திற்கு முன்பு ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் இரண்டாவது முறையாக வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் கார்டன் இல்லத்திலும் உதவியாளர் பூங்குன்றன் அறையிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவலறிந்து வந்த டிடிவி ஆதரவாளர் விபி.கலைராஜன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவை அழிப்பதற்காக திட்டமிட்டு சோதனை நடத்தப்படுகிறது எனவும் சசிகலா மீது மக்களிடம் இருக்கும் நற்பெயரை கெடுக்கவே இதுபோன்ற செயல்களில் அரசு ஈடுபடுகிறது எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும் ஜெயலலிதா இல்லத்தின் புனிதம் கெட்டுவிட்டது எனவும் ஜெயலலிதாவை ஒரு குற்றவாளியை போல் அரங்கேற்றவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட குடும்பத்தை குறிவைத்து ரெய்டு நடத்தப்படுவதாகவும் வி.பி.கலைராஜன் புகார் தெரிவித்தார்.