கருணாநிதிக்கு சிலை வைக்கும் இடத்திற்கு ஜெயலலிதா ஆட்சியில் பட்டா.!! வழக்கு போட்டவரை தெறிக்கவிட்ட எ.வ வேலு.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைய உள்ள இடத்திற்கு பட்டா வழங்கியது அதிமுக அரசு தான் என அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் சிலை அமைத்து வருகின்றனர்
.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைய உள்ள இடத்திற்கு பட்டா வழங்கியது அதிமுக அரசு தான் என அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் சிலை அமைத்து வருகின்றனர்.
அந்தவகையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அந்த இடத்தில் கருணாநிதியின் சிலை அமைக்க கார்த்திக் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் திமுகவினர் பொது இடத்தை ஆக்கிரமித்து சிலை வைக்க முயற்சி செய்து வருகின்றனர், திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் நெடுஞ்சாலை சந்திப்பில் அச்சிலை வைக்கப்படுவதால் திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு வருகின்ற லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே இந்த நடவடிக்கையை நீதிமன்றம் தடுக்க வேண்டும், சிலை வைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இது குறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது, அதுவரை சிலை வைக்கவுள்ள இடத்தில் தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரினார், அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் விரைந்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். அதுவரையிலும் சிலை வைக்கும் இடத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு மற்றும் அவரின் மகன் நடத்தி வரும் ஜீவா கல்வி அறக்கட்டளை தரப்பிலும் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலயில் இதுகுறித்து ஏவா வேலு தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை அமைக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கவில்லை, ஏற்கனவே என்ன நிலையில் இருக்கிறதோ அதே நிலையே நீடிக்க வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறது. அதே நேரத்தில் சிலை நிறுவப்பட உள்ள இடம் கட்டாந்தரையாக இருக்கிறது. ஆனால் இந்த வழக்கை தொடர்ந்திருப்பவர் வேளச்சேரியை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது, சிலை வைக்கப்படும் இடம் பொது இடம், நீர்நிலை என அவர் பொய் தகவல் அளித்திருக்கிறார். ஆனால் சிலை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமானது. 210 சதுர அடி கொண்ட அந்த நிலம் 2001-ல் ஜெயலலிதா ஆட்சியில் பட்டா வழங்கப்பட்டுள்ள இடம். அந்த இடம் 21 ஆண்டுகளாக ராஜேந்திரனின் பராமரிப்பில் இருந்தது. தற்போது தலைவர் கலைஞருக்கு சிலை வைப்பதற்காக அந்த இடத்தை திருவண்ணாமலை மாவட்ட திமுக வாங்கியுள்ளது.
அந்த நிலம் பட்டா இடம், அது புறம்போக்கோ அல்லது நத்தம் புறம்போக்கோ, சுடுகாடு புறம்போக்கு நிலமோ இல்லை அது தரிசு நிலம். அந்த நிலம் ஆறு மாதங்களுக்கு முன்பே வாங்கப்பட்டது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் சிலைகளை பொது இடத்தில் வைக்கக்கூடாது சொந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அது எங்களுக்கு நன்றாக தெரியும், எனவே உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தான் இந்த சிலையை அமைக்க உள்ளோம். அதே நேரத்தில் சிலை அமைய உள்ள இடம் கிரிவலப் பாதைக்கு அருகில் இல்லை, திருவண்ணாமலை-காஞ்சி சாலையில் உள்ளது. அப்படி இருக்கும்போது கிரிவலப்பாதை செல்லும் பக்தர்கள் மனம் எப்படி புண்படும்? வாய்ப்பே இல்லை. வழக்கு தொடர்ந்த நபர் கதை சொல்கிறார். எனவே நீதிமன்றம் முடிவை வைத்து சிலை அமைப்பது தொடர்பாக முடிவு செய்த இவ்வாறு அவர் கூறியுள்ளார்.