ஜெ.வின். உடையைக் கூட சரி செய்யாமல் வீடியோ எடுத்திருக்கிறார்களே! ஆனந்தராஜ் வேதனை!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய நாள் அன்று, மருத்துவமனையில் ஜெயலலிதா ஜூஸ் அருந்துவது போன்ற வீடியோ ஒன்றை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது வீடியோ குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் ஆனந்தராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ ஆதாரத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார்.
அது மருத்துவமனையில் இருந்தபோதுதான் எடுக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேள்வி எழுப்பினார். அதன் மூல வீடியோவில் பதிவு செய்த தேதி இருக்கும். அந்த விடியோ எங்கே என்றும் அவர் கேட்டார். தொழில்நுட்பம் தற்போது வளர்ந்து விட்டது. எனவே, யாரும் ஏமாற்ற முடியாது என்றார்.
ஜெயலலிதா தனக்கு பின்னால் இருப்பதை பார்ப்பதற்காக வீடியோ எடுத்ததாக சொல்கிறார்கள். அவர் அப்படி பார்க்க வேண்டும் என்றால், கண்ணாடியை வைத்து காட்டியிருக்கலாமே என்றார்.
ஆடையைக்கூட சரிசெய்யாமல் வீடியோ எடுத்திருத்திருக்கிறார்கள். இந்த கோலத்தில் எடுத்த வீடியோவை உடனே பத்திரப்படுத்தி வைத்தது ஏன்? என்றும் இதனை உடனடியாக அழித்திருக்க வேண்டாமா? என்றும் ஆனந்தராஜ் கேள்வி எழுப்பினார்.
எனவே, அந்த வீடியோவின் உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என்றும் ஜெ. மரணத்தில் உள்ள உண்மையான விவரங்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றார். அரசியலில் பற்று இல்லாத வகையில் பேசும் தினகரன் பின்னால் தொண்டர்கள் ஏன் செல்ல வேண்டும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.