jayalalitha treatment videos submit in arumugasamy inquiry commission

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் அடங்கிய பென் டிரைவை தினகரன் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் ஒப்படைத்தார். 

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணன், அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக், தீபாவின் கணவர் மாதவன், ஜெயலலிதாவின் உறவினர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம மோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ என்று தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் ஒரு வீடியோவை வெளியிட்டார். இதுதொடர்பாக விளக்கமளிக்க சசிகலா, அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகள் பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியது.

சசிகலா மௌன விரதம் இருப்பதால், அவர் நேரில் ஆஜராக மாட்டார் எனவும் அவருக்குப்பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ வெளியிட்டது தொடர்பாக தினகரனும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில், தினகரனுக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார்.