முதல்வர் ஜெ. உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
முதலமைச்சர் ஜெயலலிதா உடலுக்கு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, ஜெயலலிதா ஒவ்வொரு நிலையிலும் தனி முத்திரையைப் பதித்தவர் என கூறினார்.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், நேற்று இரவு 11.,30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில¢ உள்ளராஜாஜி அரங்கில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார். அப்போது, அவர் கூறியதாவது.
தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு பெரும் அதிர்ச்சியை வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்துவாடும் அதிமுகவை தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தமிழக மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை திமுக சார்பிலும் கருணாநிதி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் ஜெயலலிதா, எந்த பொறுப்பை ஏற்றாலும் தொடக்கத்தில் சத்துணவிலேயே குழுவின் உறுப்பினராக, தொடர்ந்து ராஜ்யசபா உறுப்பினராக, அதிமுக பொதுச்செயலராக தமிழக முதல்வராக இப்படி பல்வேறு பொறுப்புகளை ஏற்று பணியாற்றியவர்£.
ஒவ்வொரு நிலையிலும் தனி முத்திரையைப் பதித்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய சிறப்புக்குரிய ஒன்றாகும். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நான் துணை முதல்வராக பணியாற்றி இருக்கிறேன்.
சமீபத்தில் அவர் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரான போது நான் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் விடாப்பிடியாக இருந்து அதை நிறைவேற்றுவதில் தொடர்ந்து அழுத்தமாக உழைத்திருக்கிறார்.
அதற்காக நாம் பாராட்டை தெரிவிக்க வேண்டும். அவரை இழந்து இன்று தமிழகம், அவரது கட்சியை சேர்ந்தவர்கள் எந்த அளவுக்கு வேதனையில் இருப்பார்கள் என்பது தெரியும். இதில் திமுகவும் பங்கேற்று அந்த வேதனையில் பங்கேற்கிறது. எந்த பொறுப்பை எடுத்து கொண்டாலும் அதில் தனி முத்திரையை பதித்து வந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
அப்போது அவருடன் திமுக நிர்வாகிகள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் இருந்தனர்.