கொடநாடு கொலை வழக்கு... முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவிடம் விசாரணை தேவையில்லை...!
அப்போது நீதிபதி விசாரிக்க கோரிய வழக்கிற்கும், மனுவிற்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறி சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இளவரசி உட்பட 9 பேரை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாகோடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அரசு தரப்பு சாட்சிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது எதிர் தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, அவருடைய உறவினர்கள் இளவரசி, சுதாகரன், நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றிய சக்கர் உள்ளிட்ட 9 பேரை விசாரிக்க கோரி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் முனிரத்னம் உதகை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி விசாரிக்க கோரிய வழக்கிற்கும், மனுவிற்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறி சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இளவரசி உட்பட 9 பேரை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். ஆனால் சயான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு, கோடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், தற்கொலை செய்து கொண்ட கோடநாடு எஸ்டேட் கணினி பொறியாளர் தினேஷின் தந்தை போஜன், தடயவியல் நிபுனர் ராஜ்மோகன் ஆகிய 4 பேர் மட்டும் எதிர்வரும் 12-ம் தேதிக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.