நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு... அதிமுகவை சீண்டாதீங்க... ஜெயக்குமார் கண்டனம்!!
பாஜக தங்கள் கட்சியை வளர்த்துக்கொள்ள அதிமுகவை சீண்டிப் பார்க்க கூடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பாஜக தங்கள் கட்சியை வளர்த்துக்கொள்ள அதிமுகவை சீண்டிப் பார்க்க கூடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்தில் தைரியமாக ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவரை கூட பார்க்க முடியவில்லை. பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைதான் திமுகவை எதிர்த்து கேள்வி எழுப்புகிறார் என கடுமையாக விமர்சித்திருந்தார். நயினார் நகேந்திரனின் இந்தப் பேச்சு அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுகவைச் சேர்ந்த பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தை பதிவு செய்து வந்தனர். இந்த சம்பவம் பெரும் பேசுபொருளானதை அடுத்து, நயினார் நாகேந்திரன் தன் கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், அதிமுகவைப் பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது. நான் கூறியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்தேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, நயினார் நாகேந்திரனின் ட்வீட், கிட்டத்தட்ட மன்னிப்பு கோருவது மாதிரிதான், ஆனாலும் இது கண்டனத்திற்கு உரிய விஷயம் தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் என்ன சொன்னார் என்பது அவருக்கே புரியவில்லை என்றும், அரசியலில் கூட்டாணி தர்மத்தை பாதுக்காக்க வேண்டியது நல்லது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பாஜக கட்சியை வளர்க்க ஆயிரம் பேசிக் கொள்ளட்டும். ஆனால் அதிமுகவை சீண்டிப் பர்க்க கூடாது என்று தெரிவித்தார். மேலும் அப்படி அவர்கள் அதிமுகவை சீண்டினால் பதிலுக்கு நாங்களும் சீண்டும் நிலை ஏற்படலாம் என்று எச்சரித்திருக்கிறார். மேலும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலைப் போலவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.