jayakumar condemns kamal
தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது பீகாரைவிட தமிழகம் லஞ்சத்தில் முன்னேறி வருவதாகவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே வரி என்ற அடிப்படையில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை கடந்த 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக திரையரங்குகளுக்கு 28 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு தன் பங்கிற்கு 30% கேளிக்கை வரி விதிக்கப்படும் என அறிவித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த திரையரங்க உரிமையாளர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் இநத் போராட்டத்துக்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பெரிய நடிகர்களும், பெரிய தயாரிப்பாளர்களும் போராட்ட களத்திற்குள் குதிக்காமல் இந்த பிரச்சனை தீராது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசன் கேளிக்கை வரி குறித்து ஒரு காட்டமான அறிக்கை அளித்துள்ளார்.அதில் பீகாரை விட தமிழகம் லஞ்சத்தில் முன்னேறி வருகின்றது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆட்சியின் கீழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கேளிக்கை வரி பிரச்சனையைப் பொறுத்தவரை, பக்குவமடைந்த ஒருவனாக திரைத்துறையினருடன் ஒற்றுமையாக செயல்பட என்னால் முடிந்தவரை நான் முயற்சி செய்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது என்ற கமலஹாசனின் கருத்து முற்றிலும் தவறானது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
கமல் பொத்தாம் பொதுவாக பேசி வருவதாகவும் எங்கு ஊழல் நடைபெற்றது என்று சொன்னால் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கமலஹாசன் பேசினால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
