மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளிப்பருவ தோழிகளும், தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தான் வர வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் அரங்கேறி இருக்கிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடி, சட்டசபைத் தலைவராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்துள்ளனர்.

அதே சமயம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது தலைமையில் ஒரு அணி அமைத்து செயல்படுகிறார். இருபிரிவினரும் தனித்தனியாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்துள்ளதால், அடுத்து யார் ஆட்சி அமையும்? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளிப்பருவ தோழிகளிடம் தமிழகத்தின் நிலை குறித்து தெரிவித்து, கருத்துக் கேட்டபோது பல அதிர்ச்சிகரத் தகவல்களையும் தெரிவித்தனர். சென்னையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட் பள்ளியில் ஜெயலலிதா பள்ளிப்படிப்பை படித்தார்.

அவருடன் படித்தவரும், நெருங்கிய தோழியுமான ஸ்ரீமதி ஐயங்காரிடம் இது குறித்த கேட்டபோது அவர் கூறுகையில், “ ஜெயலலிதா தான் இருக்கும்போது, ஓ.பன்னீர் செல்வத்தின் மீது தான் நம்பிக்கை வைத்து இருந்தார்.

ஆதலால், அவர் உயிரோடு இருந்து இருந்தாலும் அவர் பன்னீர் செல்வத்தையே தேர்வு செய்து இருப்பார். ஆனால், இப்போது தமிழகத்தின் நிலைமை மிகவும் வருந்தக்கூடிய வகையில் இருக்கிறது.

நான் பள்ளிப்பருவம் கடந்து, ஜெயலலிதா வீட்டுக்கு அடிக்கடி, எப்போது வேண்டுமானாலும் சென்று வந்து கொண்டு இருந்தேன். ஆனால், 1980ம் ஆண்டுகளுக்குப்பின், அதாவது ஜெயலலிதா, சசிகலாவுடன் நட்பு ஏற்பட்டபின், திடீரென என்னால், ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை. எனக்கு அனுமதி பல முறை மறுக்கப்பட்டது.

ஜெயலலிதா அரசியல் வாழ்க்கை இந்த அளவு சோகமாகி, பாழாகிவிட்டது என கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை'' எனத் தெரிவித்தார்.

பெங்களூருவில் வசித்து வரும் ஜெயலலிதாவின் தோழியான பங்கஜ் புலானி கூறுகையில், “ ஜெயலலிதாவுக்கும், எங்களுக்கும், தோழிகளுக்கும் இடையே பிரச்சினைகளையும், இடைவெளியையும் உண்டாக்கியதே சசிகலாதான். எனக்கு குழந்தை பிறந்து இருந்தபோது, 3 முறை என்னை நேரில் வந்து ஜெயலலிதா சந்தித்து உடல்நலம் விசாரித்துச் சென்றார்.

ஜெயலலிதா வீட்டுக்கு பல முறை சென்று விருந்து சாப்பிட்டு இருக்கிறேன். ஆனால், அனைத்து ஒரு நாள் இரவில் திடீரென மாறிவிட்டது. கடந்த 2005ம் ஆண்டு ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, அவருடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டேன்.

அதன்பின், ஜெயலலிதாவை என்னால் பார்க்க முடியவில்லை, தடுக்கப்பட்டேன். பல முறை ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி செய்தபோதும் என்னால் முடியவில்லை. என் மகனின் திருமணத்தை அழைப்பிதழ் அளிக்க ஜெயலலிதாவைச் சந்திக்க பன்னீர்செல்வம் மூலம் அனுமதி பெற்றேன். ஆனால், ஜெயலலிதா வீட்டுக்குச் சென்றபோது அங்கிருக்கும் சசிகலாவின் ஆட்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டோம்'' எனத் தெரிவித்தார்.