Jai bhim: சூர்யாவுக்காக உயிரையே கொடுப்போம்.. காலண்டருக்கே கதறீங்களே. ஆனா நாங்க.? பழங்குடியின மக்கள் குமுறல்.
ஒரு காலண்டருக்கே நீங்கள் கதறுகிறீர்கள் நாங்கள் காலம் முழுக்க கதறிக் கொண்டிருக்கிறோம். விளிம்பு நிலை மக்களைப் பற்றி பேசிய அவரை மன்னிப்பு கேட்க சொல்வது நியாயம் இல்வை. சுவற்றில் தொங்க விட்டால் காலண்டருக்கு இத்தனை பிரச்சனை செய்கிறீர்கள்,
எங்களின் அவல நிலையை திரைப்படம் மூலம் வெளிச்சம் போட்டு காட்டிய நடிகர் சூர்யாவுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றும், ஒரு சாதாரண காலண்டருக்கே நீங்கள் கதறுகிறீர்கள், நாங்கள் காலமெல்லாம் கதறுகிறோம் என்று மதுரையைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜெய் பீம் திரைப்படத்தில் தங்களை சமூகத்தை இழிவுபடித்தி விட்டதாகவும், சூர்யாவிற்கு எதிராக பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பழங்குடியினர் இவ்வாறு கூறியுள்ளனர்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம், இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர் ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின் அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பலரும் சூர்யாவுக்கும்- பாமகவுக்கும் ஆதரவாக மாறிமாறி குரல்கள் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக, தமிழ்நாடு நாடோடிகள் பழங்குடி கூட்டமைப்பை சேர்ந்த மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, எலி பாம்புகளுடன் திரண்டு வந்து நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது பேசிய கூட்டமைப்பின் தலைவர் மகேஸ்வரி நடிகர் சூர்யா அவர்கள் ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் நாங்கள் படும் துயரங்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழக முதலமைச்சர் நாடோடி மக்களை தேடிச்சென்று குறைகளை அறிந்து நிவர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்டுள்ளார். அதனடிப்படையில் அதிகாரிகள் எங்கள் குறைகளை நிறைவேற்றிய நிவர்த்தி செய்து வருகின்றனர்.
ஜெய் பீம் படம் மூலம் எங்கள் பிரச்சினையை முதன்முதலில் வெளிச்சத்திற்கு கொண்டு, பெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியவர் சூர்யா, அவருக்கு எதிராக சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவரையும் மிரட்டுகின்றனர், நடிகர் சூர்யாவுக்கு எங்கள் உயிரையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என கூறியிருந்தார். இந்நிலையில் அந்த மக்கள் வசிக்க பகுதிக்குச் சென்று யூடியூப் சேனல் ஒன்று அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளது. அதில், அப்பகுதி மக்கள் கூறியதாவது, நடிகர் சூர்யா சார் எடுத்துள்ள ஜெய் பீம் திரைப்படம் உண்மையிலேயே எங்களுடைய அவலநிலையை காட்டியுள்ளது. இதில் சாதி மதம் என்பதே கிடையாது, உண்மையிலேயே நாங்கள் அந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறோம். சமீபத்தில்கூட ஒரு திருட்டு வழக்கு ஒன்றில் எங்களை கைது செய்து மிக கொடூரமாக காவல்துறையினர் தாக்கினர். ஆனால் அதையும் நம்பாமல் எங்கள் வீடுகளுக்கு வந்து தோண்டி பார்த்தனர், எப்படியாவது எங்கள் மீது பொய் வழக்குப் போட்டு வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என போலீசார் முயற்சிக்கின்றனர். தற்போது சூரிய அவர்கள் எடுத்துள்ள ஜெய்பீம் படத்தின் மூலம் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு நன்றி தெரிவிக்கதான் நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தோம். எங்கள் அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டிய சூர்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.
ஒரு காலண்டருக்கே நீங்கள் கதறுகிறீர்கள் நாங்கள் காலம் முழுக்க கதறிக் கொண்டிருக்கிறோம். விளிம்பு நிலை மக்களைப் பற்றி பேசிய அவரை மன்னிப்பு கேட்க சொல்வது நியாயம் இல்வை. சுவற்றில் தொங்க விட்டால் காலண்டருக்கு இத்தனை பிரச்சனை செய்கிறீர்கள், அக்னி காலத்துக்காக போராடுகிறோம் என்கிறீர்கள், அக்னி கலசம் என்பது உங்களுக்கு மட்டும் சொந்தமா? அக்கினி என்பது எல்லோருக்கும் சொந்தம். கலசம் என்பது உங்கள் கோவிலில் மட்டும் வைப்பது அல்ல எல்லாருடைய கோயிலிலும் வைக்கப்படுகிறது. அந்தப்படத்தில் எங்களுடைய வலியை காண்பிப்பதற்காக ஒரு பெண்மணியை நிர்வாணமாக காண்பித்தார்கள் அதைப்பார்த்தும் கூட நீங்கள் மனமிறங்கவில்லையா? இந்த அவல நிலையை எடுத்துச் சொன்ன சூர்யா அவர்களுக்கு எதிராக போராட்டம் செய்கிறீர்கள், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்கிறீர்கள், உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? பழங்குடி மக்களின் பாவத்தில் விழாதீர்கள். பழங்குடியின மக்கள் 10 லட்சம் பேர் இருக்கிறோம், நாங்கள் அனைவரும் ஒரு இடத்தில் திரள்வதற்கும் தயார். பழங்குடியின மக்கள் நடிகர் சூர்யாவுக்கு பக்கபலமாக இருப்போம். உங்கள் உயிரையும் அவருக்குக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.