பஞ்சாப் தேர்தல் ‘ட்விஸ்ட்..’ தமிழக அரசு அதிகாரி ‘டூ’ பாஜக முதல்வர் வேட்பாளர்..? யார் இந்த ஜக்மோகன்..?
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை எதிர்த்து, அமிர்தசரஸ் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் ஜக்மோகன் சிங் போட்டியிடுகிறார்.
டெல்லியில் உள்ள தமிழக அரசின் பணிகள் அனைத்தையும் ஜக்மோகன் சிங் ராஜு முன்னின்று கவனித்து வந்தார். டெல்லியில் உள்ள 2 தமிழ்நாடு இல்லங்களை நிர்வகிப்பது, தமிழக அரசு ஒன்றிய அரசுடன் தொடர்பு கொண்டு ஒன்றிய அரசின் திட்டங்கள் தொடர்பான பணிகள், நிதி ஒதுக்கீடு தொடர்பான பணிகள் அனைத்திலும் இவர் முக்கிய பங்கு வகித்து வந்தார்.
இவர் முதன்மை செயலாளருக்கு இணையாக கூடுதல் முதன்மை செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் விருப்ப ஓய்வு வேண்டும் என்று விண்ணப்பித்திருந்து அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மிகவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஜக்மோகன் சிங் ராஜு தமிழக அரசு பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். தமிழக அரசு அந்த பணிக்கு வேறொரு புதிய அதிகாரியை நியமிப்பதற்கு, ஏற்கனவே பொறுப்பில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்பை கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பணிகள் தொடர்பான ஒன்றிய அரசுடன் நடைபெறும் அனைத்து கருத்து பரிமாற்றங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தவர் ஜக்மோகன் சிங் ராஜு.
எனவே அவர் தற்போது அவரது பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. விருப்ப ஓய்வு பெற்ற நாளிலேயே, பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதேதொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஏற்கெனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை தேர்தலில் போட்டியிடுவதற்கு தான், விருப்ப ஓய்வு பெற்றாரோ என கேள்வியும் எழுந்து இருக்கிறது. இவர் பஞ்சாப்பின் பாஜக முதல்வர் வேட்பாளராக நிறுத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.