ஜெயலிலதாவின் சொத்துக்களுக்கு குறி... அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சி திடீர் ஆதரவு..!
மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு அதிமுகவுக்கு ஆதரவு என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு அதிமுகவுக்கு ஆதரவு என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அத்தையின் தொகுதியை கைப்பற்றியே தீருவேன் என எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் சார்பில் தீபா களமிறங்கினார். ஆனால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஏற்கனவே விரைவில் அதிமுகவில் கட்சியை இணைக்க உள்ளதாகவும் தீபா கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தீபா மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்களைவ மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆதரவு அளிக்கிறது என்றார். எந்த பதவியும் எனக்கு தேவையில்லை, அதிமுகவின் எதிர்கால நலன், வெற்றியை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கப்படுகிறது. ஜெயலலிதா சொத்துக்களை மீட்டெடுக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதிமுக தலைமையிலிருந்து அழைப்பு வந்தால் பிரச்சாரம் அதிமுகவுக்கு ஆதரவாக மேற்கொள்வேன். திமுக, அதிமுக கூட்டணியை தாண்டி போட்டியிடுபவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை. தேர்தலுக்கு பிறகு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்புள்ளது.
மேலும் சட்டமன்ற, மக்களவை தேர்தல்களில் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக எனது கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். அ.தி.மு.க நிர்வாகிகள் எங்களது ஆதரவை ஏற்றுக்கொண்ட பிறகே தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளேன் என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.