மிஸ்டர் புகழேந்தி நீங்க கில்லாடின்னா நாங்க படு கில்லாடி: பெங்களூரு ரெய்டு கலகல...
ரெய்டு புயல் தமிழகம் தாண்டியும் வீசிய இடங்கள் வெகு சிலவே. அதில் பெங்களூரில் உள்ள புகழேந்தியின் வீடும் ஒன்று. ஓல்டு ஏர்போர்ட் சாலை எனும் பரபர மெயின் ரோட்டிலிருந்து கூப்பிடு தொலைவில்தான் இருக்கிறது புகழேந்தியின் வீடு. இங்கு ஐ.டி. அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து துலாவியபோது ‘கட்டு கட்டாக எந்த பணமும் இங்கே இல்லை, கொத்து கொத்தாக எந்த நகையுமில்லை’ என்று நியாயம் பேசினார்களாம் புகழேந்தியின் ஆட்கள்.
அதற்கு ‘பணம், நகையை மட்டும் எதிர்பார்த்து நாங்க வரலையே!’ என்று புதிராய் சிரித்தார்களாம் அதிகாரிகள். அப்படியானால் புகழேந்தியின் வீட்டில் அவர்கள் முக்கியமாக தேடியதுதான் என்ன? எனும் கேள்விக்கான விடை இதோ...
“பெங்களூருவில் உள்ள புகழேந்தியின் வீட்டில் அதிகாரிகள் தேடியது அவருக்கும், தினகரனுக்கும் மேலும் சுகாஷூக்கும் உள்ள தொடர்பு, நெருக்கம் பற்றிய ஆவணங்களைத்தான். அதாவது இரட்டை இலையை பெற்றுத்தர தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் தினகரனுக்காக பேரம் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டு கைதானாரே அதே சுகாஷ்தான்.
அதேபோல் அந்த வழக்கில் தினாவுக்கு பண உதவி செய்த அதே பெங்களூர் நபரான ஆஸ்திரேலியா பிரகாஷ் எனும் நபருக்கும் தினாவுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் ஏதேனும் ஆதாரம் புகழேந்தியின் வீட்டில் இருக்கலாம் என்பதும் ரெய்டை இயக்கிய நபரின் எண்ணம். அதைத்தான் அங்கே தேடியிருக்கிறார்கள்.
அவர்களின் அனுமானம் தப்பவுமில்லை அதேநேரத்தில் ஆஹா ஓஹோ என்ற அளவிலும் எதுவும் சிக்கவுமில்லை. ஆனால் கிடைத்ததை வைத்து இரட்டை இலைக்காக பணம் கொடுக்க முயன்ற வழக்கில் நிச்சயம் அதிரடி மாற்றங்களை கொண்டு வர முடியும். இந்த வழக்கில் தினகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை பதிய சொல்லி நீதிமன்றம் கெடு கொடுத்திருக்கும் நிலையில் அங்கே கிடைத்தவை நிச்சயம் மத்திய அரசுக்கு கைகொடுக்கும்.” என்று கதைக்கிறார்கள் இந்த ரெய்டின் நீக்கு போக்கை தெளிவாக அறிந்தவர்கள்.
ஆக எதையோ இவர்கள் தேடுவதாக புகழேந்தி நினைக்க இவர்களோ அதை தேடி வந்து அலசி எடுத்திருப்பதால் இப்போது பேஸ்தடித்துக் கிடக்கிறார் புகழ். நீங்க கில்லாடின்னா நாங்க கில்லாடிக்கு கில்லாடி! என்று புகழேந்தியிடம் நிரூபித்திருக்கிறார்கள் ஐ.டி. அதிகாரிகள்.