புதுச்சேரி தொகுதியை குறிவைக்கும் தமிழிசை.? தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பிடி கொடுக்காமல் நழுவும் ரங்கசாமி
தெலங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை, நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பாஜகவிற்கு புதுவை தொகுதியை ஒதுக்கீடு செய்ய ரங்கசாமி விரும்பவில்லையென கூறப்படுகிறது.
![It is reported that Tamilisai is planning to contest from Puduwai constituency KAK It is reported that Tamilisai is planning to contest from Puduwai constituency KAK](https://static-ai.asianetnews.com/images/01fsnyrtj2p3gwcra2mcwxb5na/untitled-design--13-_363x203xt.jpg)
நாடாளுமன்ற தேர்தல் பணி
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஹாட்ரிக் வெற்றியை பெறுவதற்காக தேர்தல் பணிகளை பாஜக துரிதப்படுத்தி உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை இலக்காக வைத்து களப்பணியை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக சார்பாக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் பாஜக மாநில தலைவரும் தற்போதைய தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் மீண்டும் அரசியல களத்தில் நுழைய விருப்பப்பட்டுள்ளார்.
மீண்டும் அரசியல் களத்தில் தமிழிசை
ஆளுநர் பொறுப்பில் இருந்தாலும் திமுக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். எனவே தமிழகத்தில் தேர்தல் களத்தில் தமிழிசை இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழிசை தூத்துக்குடி அல்லது விருதுநகரில் இரண்டில் ஏதேனும் ஒன்றில் போட்டிட இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது புதுவையை தமிழிசை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. புதுவை மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை அங்கு பல்வேறு பணிகளை அங்குள்ள அரசோடு இணைந்து செயல்படுத்தி வருகிறார். எனவே புதுவை மக்களிடம் தனக்கு மதிப்பும் செல்வாக்கும் இருப்பதை உணர்ந்த அவர் புதுவையில் போட்டியிட விரும்பியதாக தெரிகிறது.
பிடி கொடுக்காமல் நழுவும் ரங்கசாமி
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தனது கருத்தை கூறியுள்ளார். அதற்கு அவர் புதுவையில் கூட்டணி கட்சியை ஆதரவோடு உள்ளோம் எனவே அங்கு போட்டியிடுவது தொடர்பாக அங்குள்ள தலைவரின் ஒப்புதல் வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து புதுவை மாநில ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமியிடம் புதுவை தொகுதியை தனக்கு ஒதுக்குமாறு ஆலோசனை நடத்த தமிழிசை திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை கேள்விப்பட்ட ரங்கசாமி, தமிழிசை சௌந்தர்ராஜனிடம் நாடாளுமன்ற தொகுதி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதை தவிர்த்து வருகிறார். இதனால் மீண்டும் தமிழகத்திலேயே போட்டியிடலாமா என தமிழிசை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்