“மோடி இப்போது விருந்தினர். விருந்தினராக வருவோரை எதிர்க்க வேண்டியதில்லை” என்று திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பது நம் கடமை என்று திமுக மகளிரணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதி உதவியுடன் ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைக்க வருமாறு தமிழக அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜனவரி 12- ஆம் தேதி டெல்லியிலிருந்து கிளம்பி மதுரைக்கு வருகிறார். 

மதுரையில் தமிழக பாஜக சார்பில் நடைபெறும் ‘மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜகவினர் செய்து வருகின்றனர். இதனையடுத்து மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைக்கும் விழாவில் மோடி பங்கேற்கிறார். விருதுநகரில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். கடந்த ஆட்சியில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதெல்லாம், திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் கோ-பேக் மோடி என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, சமூக ஊடகங்களில் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

மருத்துவக் கல்லூரி விழாவுக்கு பிரதமரை அழைத்ததால், ‘கோ-பேக் மோடி என்றவர்கள் ப்ளீஸ் கம் என்று மோடியிடம் கெஞ்சுகிறார்கள்’ என்று பாஜகவினர் கிண்டலடித்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில், “மோடி இப்போது விருந்தினர். விருந்தினராக வருவோரை எதிர்க்க வேண்டியதில்லை” என்று திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக மகளிரிணி செயலாளர் கனிமொழியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், “மக்களுக்கு எதிரான திட்டங்களை திமுக அரசு ஒரு போதும் ஆதரிக்காது. மாநில திட்டங்களை தொடங்குவதற்காக தமிழகம் வரும் பிரதமரை வரவேற்பது நம் கடமை. அரசியல் கருத்தியல் என்பது வேறு” என்று தெரிவித்துள்ளார். 

பிரதமராக மோடி பதவியேற்ற 2014-லிருந்து திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. அதனால், மோடி வருகையை வரவேற்பது சுலபமாக இருந்தது. ஆனால், இப்போது ஆளுங்கட்சியாக திமுக உள்ள நிலையில், பிரதமர் வருகையை எதிர்த்தால் சிக்கலாகும் என்பதால், மோடிக்கு எதிராக எதுவும் பதிவிடக் கூடாது என்று திமுக ஐ.டி. விங்கிற்கு கட்சி தலைமை கட்டளைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.