ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தனது மகன் திருமணத்திற்கு திருமதி சசிகலாவை அழைத்துள்ள நிலையில், ஜூன் 7 ஆம் தேதி சுப முகூர்த்த நாளில் ஓ.பி.எஸ் சசிகலா சந்திப்பார்களா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

அதிமுகவில் அதிகார மோதல்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக 4 பிரிவாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். அதே நேரத்தில் இபிஎஸ்யை வீழ்த்த டிடிவி தினகரனோடு ஓபிஎஸ் கை கோர்த்துள்ளார். இந்தநிலையில் கடந்த வாரம் டிடிவி தினகரனை ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் சந்தித்து பேசினார். இதனையடுத்து தற்போது சசிகலாவை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பி.எஸ் ஆதரவளரான வைத்திலிங்கத்தின் மகன் சண்முக பிரபுவின் திருமணம், தஞ்சாவூரில், ஓ.பி.எஸ் தலைமையில் வரும் ஜூன் 7 ஆம் தேதி நடைபெறுகிறது.

சசிகலாவை சந்தித்த வைத்தியலிங்கம்

திருமணத்திற்கு ஏற்கனவே அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சென்று அழைப்பு விடுத்த வைத்திலிங்கம் , நேற்று (31.5.2023) சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலா இல்லத்துக்கு வந்து சசிகலாவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் பேட்டி அளித்த வைத்திலிங்கம், மகன் திருமணத்துக்கு சசிகலாவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை எனக்கூறினார். திருமணத்தன்று ஓ.பி.எஸ் சசிகலா சந்திக்க வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார். கடந்த மே மாதம் 8 ஆம் தேதி டி.டி.வி. தினகரனை அவரது இல்லத்தில் ஓ.பி.எஸ். சந்தித்து பேசினார்.

ஓபிஎஸ்- சசிகலா சந்திப்பு

அதிமுகவை மீட்க டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என கூறினார். இது நாள் வரை சசிகலாவை ஓ.பி.எஸ் சந்திக்கவில்லை.சசிகலாவுடனான சந்திப்பு எப்போது என ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில், வரும் ஜூன் 7 ஆம் தேதி தஞ்சாவூரில் நடக்கவிருக்கும் வைத்திலிங்கம் மகன் திருமணத்தில் ஓ.பி.எஸ். - சசிகலா சந்திப்பு நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

வாட்ஸ்அப்பில் வருவதை வாந்தி எடுக்கும் அண்ணாமலை.. கொஞ்சம் பார்த்து பேசுங்க.. கொதிக்கும் செல்வபெருந்தகை..!