தமிழ்நாடு மின்மிகை மாநிலமா..? பட்ஜெட் உரையில் அம்பலப்படுத்திய அமைச்சர் பிடிஆர்.தியாகராஜன்..!
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருக்கிறது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்து இருந்தார்.
2022-2023-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டிற்கு வலுவான அடித்தளம் அமைப்பதே இந்த திருத்த பட்ஜெட்டின் முதன்மை நோக்கம் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது பட்ஜெட் உரையில், ‘’தொழில்துறைக்கு புதிய தொழில்கொள்கை உருவாக்கப்படும். தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலவச ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1303 ஆக உயர்த்தப்படும். சென்னை பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும். மாநிலத்தின் 2ம் நிலை மற்றும் 3ம் நிலை நகரங்களிலும் டைடல் பார்க் ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக விழுப்புரம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடியில் டைடல் பார்க் உருவாக்கப்படும். திருவண்ணாமலை, தர்மபுரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
ரூ.2,000 கோடியில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும். 1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவை வழங்கப்படும். ரூ.400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும். ஏறத்தாழ 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது; தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது’’ என அவர் தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருக்கிறது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்து இருந்தார். அந்த விவரம் தவறு என தற்போது நிதித்துறை அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் அம்மபலப்படுத்தி உள்ளார்.