ஒன்றிய அரசுன்னு சொல்றது தப்பா..? இங்கிலீஸ் தெரியலைன்னா இப்படித்தான்.. பங்கம் செய்த கார்த்தி சிதம்பரம்..!
கொங்கு நாடு ஒரு டிரையல் பலூன் போன்றது. வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகப் பறக்க விடுகிறார்கள் என்று சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டை பொறுத்தவரை கொங்குநாடு என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை. அப்படி வைத்தாலும் அதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது. இது ஒரு டிரையல் பலூன் போன்றது. வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகப் பறக்க விடுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு நீட் தேவையற்ற ஒன்று. ஆனால், சட்டரீதியாக அதைச் சந்திக்கவும் எதிர்கொள்ளும் சூழ்நிலையிலும் தமிழ்நாடு உள்ளது. இந்த ஆண்டு முடியாமல்போனாலும், அடுத்த ஆண்டு தமிழக அரசின் முயற்சி வெற்றி பெறும்.
யூனியன், ஒன்றிய அரசு என்று அழைப்பது தவறு என்று கூறுபவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்கள். யூனியன் பட்ஜெட் என்கிறோம். அதாவது ஒன்றிய பட்ஜெட் என்ற பெயரிலேயே பட்ஜெட் போடப்படுகிறது. யூனியன் மினிஸ்டர் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறோம். ஆகவே ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் 3 தவறான முடிவுகளே காரணம். திடீர் பண மதிப்பிழப்பு, குழப்பமான ஜிஎஸ்டி, முன் அறிவிப்பு இல்லாத ஊரடங்கு காரணமாக எல்லாத் தொழில்களும் முடங்கின. தொழில்கள் மூலம் வரி வருவாய் வராத காரணத்தால், 130 கோடி மக்களிடம் வரி விதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் வரியை விதித்துள்ளார்கள்.
வாஜ்பாய், அத்வானி காலத்திலிருந்து கட்சிக்காக போராடியவர்களை ஓரம் கட்டிவிட்டார்கள். தனக்கு விசுவாசமானவர்கள் யார் என்பதைப் பார்த்து மட்டுமே மோடி பதவி வழங்கி உள்ளார். தேசிய கட்சிக்கு மாநிலத்துக்கு மாநிலம் கருத்துக்கள் மாறுபடும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மேகதாது பிரச்னையில் தமிழக அரசுக்கு உறுதுணையாக செயல்படும். இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட முடியாது. நடக்கும் சூழலைப் பார்த்தால் அதிமுக விரைவில் சசிகலா தலைமையின் கீழ் இயங்கும்” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.