மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா இன்று டிஸ்சார்ஜ் ஆவார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. வரும் நவ 14 அன்று வளர் பிறை என்பதால் அன்று இல்லம் திரும்புவார் என கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்.22 அன்று உடல்நலக்குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் அப்போது கிளப்பப்பட்டன.
முதல்வர் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அவரை வெளியூருக்கு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் , தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரவேண்டும் என சுப்ரமணியம் சுவாமி உட்பட பலர் பேசினர்.
முதல்வருக்கு சிகிச்சை அளிக்க லண்டனிலிருந்து சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் , எய்ம்ஸ் மருத்துவர்கள், சிங்கப்பூர் மருத்துவர்கள் என ஒரு குழுவே இயங்கியது. இதனால் முதல்வர் விரைவாக குணமடைந்தார். சாதாரணமாக பேசவும் , உணவு அருந்தும் நிலைக்கும் வந்தார் .
அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் பிசியோதெரபி சிகிச்சையால் அவர் இயல்பு நிலைக்கு வேகமாக திரும்பி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இரண்டாவது முறையாக முதல்வரை காண வந்த கவார்னர் வார்டுக்குக்கே சென்றதாக தெரிவித்தார்.
முதல்வரை சிங்கப்பூருக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று கூறிய சு.சுவாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் உடல் நிலை குணமடைந்து விட்டதாகவும், விரைவில் இல்லம் திரும்ப உள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அம்மா பக்தர்கள் மகிழ்ச்சியடையலாம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தீபாவளிக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதா இல்லம் திரும்புவார் என்றும் , அதிமுக தொண்டர்களுக்கு தித்திக்கும் தீபாவளியாக இது இருக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது செல்வதை விட மேலும் சில நாள் ஓய்வு எடுத்துவிட்டு தீபாவளி கழித்து செல்லலாம் என முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
வரும் நவ.14 அன்று நிறைந்த முகூர்த்த நாள் , வளர்பிறை அன்று இல்லம் திரும்ப ஆலோசனை கூறப்பட்டதாகவும் அன்று முதல்வர் இல்லம் திரும்ப அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனபது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கார்டன் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
