தூக்கியடிக்கப்பட்ட ராஜிவ் ரஞ்சன்... புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம்...!
திமுக பதவியேற்றதும் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமிக்கப்படுவார் என ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்றுள்ளது. முதல் நாளிலேயே கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்றும், மே 16 முதல் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைப்பு, மகளிர் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம், கொரோனா பாதித்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைக்கான கட்டணங்களை தமிழக அரசே ஏற்கும், 100 நாட்களின் மக்களின் குறைகளை தீர்க்க தனி துறை என அசத்தலான 5 திட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.
புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும் போது நிர்வாக ரீதியாகவும் சில தலைமை அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர்களுக்கான தனிச் செயலாளர்கள் நியமனம், " உங்கள் தொகுதியில் முதல்வர்" என்கின்ற முதல்வர் குறைதீர்ப்பு பிரிவிக்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதிஷ் ஐஏஎஸ் நியமனம் என அடுத்தடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
திமுக பதவியேற்றதும் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமிக்கப்படுவார் என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக தலைமைச் செயலாளராக உள்ள ராஜிவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுத்தாளராகவும், சிறந்த பேச்சாளராகவும் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர். ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.