Investigate Pele and inquire Vaiko for jayalalitha mystery behind death

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை கமிஷனை அறிவித்து ஆணையிட்டாலும் இட்டது அரசு, அமைச்சர்கள் ஓவரோ ஓவராகத்தான் கருத்துச் சொல்லி தள்ளுகிறார்கள். 

இன்று டெல்லியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இந்த விவகாரம் பற்றி பேசுகையில் ‘விசாரணையின் போக்கில் எல்லா விஷயங்களும் அலசப்படவும், விசாரணை நடத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. 

ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் டாக்டர் பீலேவும் விசாரிக்கப்படுவார்.’ என்று பேட்டி தட்டியிருக்கிறார். 

பன்னீர் தனி அணி நடத்தியபோது வகைதொகையில்லாமல் எதிரணியை தாளித்து தள்ளிய சில அமைச்சர்களில் சி.வி.எஸ்.ஸும் ஒருவர். கடந்த ஜெ., ஆட்சியில் அமைச்சர் பொறுப்பை பெற்றவர் பிறகு அது பறிக்கப்பட்டு டம்மியாக்கப்பட்டார். பின் 2016 தேர்தலில் மீண்டும் சீட் கிடைத்து அமைச்சரானவர் ஜெ., மரணத்துக்குப் பின் ரொம்பவே கெத்து காட்டுவதாக ஒரு புகார் உண்டு.

அதிலும் பன்னீர் செல்வம் ஜெ., சமாதியில் தியானத்தில் அமர்ந்து கட்சியை பிளந்த இரவில் சி.வி.சண்முகம் எந்த நிலையில் மீடியாவை சந்தித்து எப்படியெல்லாம் பேசினார் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறிந்ததே. 

இப்போது பீலேவும் விசாரிக்கப்படுவார் என்ரு அவர் கூறியிருப்பது ஒரு சாதாரண ஸ்டேட்மெண்ட்காகவே எடுத்துக் கொள்ளப்பட்டாலும் கூட அவரது பழைய பிஹேவியர்களை வைத்து அவரை நெட்டிசன்கள் போட்டுப் பிளக்கத்தான் செய்கிறார்கள்.

குறிப்பாக, ‘பீலேவை விசாரிப்போமுன்னு சொல்லியிருக்கீங்களே! அப்படியே பீலே விசிட்டிங் கார்டு கொடுத்த வைகோவையும் விசாரிக்க சொல்லுவாரா சண்முகம் சமூகம்?!’ என்று அக்குறும்பாக கேட்டிருக்கிறார்கள். 

ஒரு விசிட்டிங் கார்டு வாங்கி வெச்சது குத்தமாய்யா? என்று இந்த நேரத்தில் புயலின் ஆதரவாளர்கள் புழுங்கலாம். விசிட்டிங் கார்டு வாங்கியது குற்றமில்லை, ஆனால் அதெல்லாம் ஒரு விஷயமென்று வெளியே வந்து பேட்டி தட்டியதுதான் ரகளையே!