பாஜகவுக்கு வெற்றி கிடைத்த 4 தொகுதிகளின் மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார் பரிசு.. சொன்னதை செய்த எல்.முருகன்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், மாவட்ட தலைவர்கள் நால்வருக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இனோவா கார் பரிசாக வழங்குகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் மாவட்டத் தலைவர்களுக்கு இனோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பு அப்போதைய தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எம் ஆர். காந்தி நாகர்கோயிலிலும், வானதி சீனிவாசன் கோவை தெற்கிலும், நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியிலும், சரஸ்வதி மொடக்குறிச்சியிலும் வெற்றி பெற்றனர். இதன்மூலம் 2001 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவினர் சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர்.
இந்நிலையில் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளைச் சேர்ந்த ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோயில், கோவை ஆகிய மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார் வழங்க பாஜக தலைமை முடிவு செய்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 4 மாவட்டத் தலைவர்களுக்கு புதிய இனோவா கார்களைப் பரிசாக வழங்குகிறார்.