Indian Army chief Bipin Rawat defends use of human shield in Kashmir

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி புர்ஹான் வானி பாதுகாப்பு படையினரால் சில மாதங்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைக் அம்மாநிலத்தில் பிரிவினைவாதிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
சில நேரங்களில் அமைதி வழிப் போராட்டம் வன்முறையாகவும் வெடித்தது. கலவரக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகளை ராணுவம் பயன்படுத்தியதில் ஏராளமாோர் காயமடைந்தனர். சிலருக்கு கண்பார்வையும் பறிபோனது.

இந்தச் சூழலில் ஒரு மாதத்திற்கு முன்பு அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்தல் அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்த முயன்றனர். காப்பாற்ற முயன்ற ராணுவ வீரர்கள் மீது கல்வீசப்பட்டது. இந்தச் சூழலில் போராட்டக்காரர்களில் ஒருவரைப் பிடித்த ராணுவ அதிகாரி கோகாய் என்பவர் அந்தநபரை ஜீப்பின் முன்பகுதியில் கட்டி, மனித கேடயமாக்கி, தேர்தல் அதிகாரிகளை பத்திரமாகக் காப்பாற்றினார்.

இந்தச் சம்பவம் நாடு முழுமைக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனித கேடயமாக்கிய ராணுவ அதிகாரியைப் பாராட்டி அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதும் விவாதத்திற்கு உள்ளானது. இந்தச் சூழலில், சுயப்பாதுகாப்புக்கு ராணுவ வீரர்களுக்கு முழு உரிமை இருப்பதாக ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், "ராணுவ அதிகாரி கோகாய் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க முடியும். அவர் அப்படிச் செய்யாமல் போராட்டக்காரரை ஜீப்பில் கட்டிச் செல்லும் படி உத்தரவிட்டுள்ளார். சுயப் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ராணுவத்தினருக்கு உரிமை உண்டு. காஷ்மீரில் மறைமுகப் போர் நடக்கிறது. மோசமான வழியில் நடக்கும் இப்போரை புதிய உத்திகளைக் கொண்டுதான் கையாள வேண்டும்" இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.