கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா.. மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை..!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை சுனாமி வேகத்தில் பரவி வருகிறது. நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 35,579 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 6,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று தமிழகம் முழுவதும் 397 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 19,131ஆக அதிகரித்துள்ளது.
தினசரி தொற்று எண்ணிக்கையில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னை தவிர்த்து, அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, கொங்கு மண்டலமான கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொற்றுப் பரவல் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், தொற்று பரவல் அதிகமாக உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, நீலகிரி, தூத்துக்குடி, தேனி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.