income tax raid complete in jaya tv office

கடந்த 9-ம் தேதி தொடங்கி 5 நாட்களாக ஜெயா டிவி அலுவலகத்தில் நடந்துவந்த வருமான வரி சோதனை நிறைவடைந்தது.

சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள், உதவியாளர்கள், ஜோதிடர் என அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 9-ம் தேதி காலை வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். 

பல இடங்களில் சோதனை நிறைவடைந்தது. சோதனை முடிவடைந்தவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

ஆனால், ஜெயா டிவி அலுவலகம், இளவரசியின் மகனும் ஜெயா டிவியின் தலைமை நிர்வாக அதிகாரியுமான விவேக்கின் வீடு, அவரது சகோதரி கிருஷ்ணபிரியாவின் வீடு, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் 5 வது நாளாக இன்றும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஜெயா டிவி அலுவலகத்தில் 5 நாட்களாக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு உள்ள விவேக்கின் அறை, அந்நிறுவனத்தின் பொதுமேலாளர் நடராஜன் அறை என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. 

ஆனால், ஜெயா டிவி அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் அறையின் சாவி மட்டும் கிடைக்கவில்லை எனவும் அந்த சாவியை விவேக்கிடம் அதிகாரிகள் கேட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் சாவி தன்னிடம் இல்லை எனவும் சசிகலாவிடம் இருப்பதாகவும் அவர் எங்கு வைத்திருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியாது எனவும் அதிகாரிகளிடம் விவேக் கூறிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், அந்த அறையில் சோதனை நடத்தப்பட்டதா என்ற தகவல் தெரியவில்லை. எனினும் ஜெயா டிவி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளன. இந்நிலையில், கடந்த 9-ம் தேதி தொடங்கி 5 நாட்களாக நடைபெற்ற சோதனை முடிவுற்றது.

இங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விளக்கமளிக்க விவேக், நடராஜன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.