income tax officers inquiry sasikala relative doctor sivakumar
சசிகலாவின் அண்ணன் மருமகன் மருத்துவர் சிவக்குமார், வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களின் உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 9-ம் தேதி 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில் சோதனை முடிந்துவிட்டது.
5-வது நாளாக இன்று, விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோரின் வீடுகள், மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்ட சில இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதுவரை நடந்த சோதனைகளில் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் போலி நிறுவனங்கள் நடத்தியதற்கான ஆவணங்களும் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 9-ம் தேதி, அதிரடியாக தொடங்கிய சோதனை புயலில் சிக்கியவர்களில் சசிகலாவின் அண்ணன் மருமகன் மருத்துவர் சிவக்குமாரும் ஒருவர். சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்த சோதனை முடிந்துவிட்டதை அடுத்து, நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
வருமான வரி சோதனை நடத்தி முடிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனடிப்படையில், சிவக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதையடுத்து இன்று காலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் ஆஜரான சிவக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், சிறிது நேரத்திலேயே வருமான வரி அலுவலகத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், தினகரனின் ஆதரவாளரும் கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளருமான புகழேந்தியும் வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
