income tax officers inquiry on poongundran

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார். தினகரனின் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களின் உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 9-ம் தேதி 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில் சோதனை முடிந்துவிட்டது.

5-வது நாளாக இன்று, விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோரின் வீடுகள், மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்ட சில இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதுவரை நடந்த சோதனைகளில் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் போலி நிறுவனங்கள் நடத்தியதற்கான ஆவணங்களும் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருமான வரி சோதனை நடத்தி முடிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

அதனடிப்படையில், ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார். 

சென்னை அடையாறில் உள்ள பூங்குன்றன் வீட்டில் கடந்த 9-ம் தேதி சோதனை நடைபெற்றது. இதையடுத்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து இன்று வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.

தினகரனின் ஆதரவாளரும் கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளருமான புகழேந்தியும் வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதற்கு முன்னதாக சசிகலாவின் அண்ணன் மருமகன் மருத்துவர் சிவக்குமாரிடம் சுமார் ஒன்றரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

5-வது நாளாக இன்று முக்கியமான சில இடங்களில் மட்டுமே சோதனை நடந்துவரும் நிலையில், சோதனை முடிந்தவர்கள் அடுத்தடுத்து விசாரிக்கப்படலாம் என தெரிகிறது.

ஆனால், வருமான வரி சம்மன் யார் யாருக்கு அனுப்பப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் தெரியவில்லை.