அரசு ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்யலைன்னா என்ன நடக்கும் தெரியுமா ? அரசு அதிரடி….
உத்தரபிரதேச மாநிலத்தில் ஒழுங்காக பணியாற்றாத அரசு ஊழியர்கள் 50 வயதிலேயே கட்டாயமாக ஓய்வு கொடுத்து அனுப்பப்படுவார்கள் என உத்தரபிரதேச அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முறையாக பணியாற்றுவது இல்லை என்ற குற்றச்சாட்டு பொதவாக வைக்கப்படுகிறது. பணிகளை செய்து கொடுக்க லஞ்சம் பெறுவது, வேலையை செய்து முடிக்காமல் இழுத்தடிப்பது என பல குற்றச்சாட்டுக்கள் அரசு ஊழியர்கள் மீது சுமத்தப்படுகிறது.
இதையடுத்து முறையாக பணிகளை மேற்கொள்ளாத உத்தரபிரதேச அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு அலுவலகங்களுக்கு, கூடுதல் தலைமை செயலாளரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களை உயர் அதிகாரிகள் கண்காணிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 31-ம் தேதியில் இருந்து இந்த வயது வரம்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், முறையாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் 1986-ம் ஆண்டு முதல் நடப்பில் இருந்து வருவதாகவும், ஆனால் பல்வேறு அரசு அலுவலகங்களில் இது பின்பற்றப்படவில்லை எனவும், இனி வரும் காலங்களில் இந்த சட்டம் தீவிரமாக பின்பற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.