இந்தியாவின் அத்தனை மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் பிடிக்க முடியாது - ஓங்கி அடித்த தினகரன்...
திருச்சி
இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்தாலும், தமிழகத்தில் அவர்களால் ஆட்சியை பிடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று திருச்சியில் டிடிவி தினகரன் கூறினார்.
டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று தேனி சென்றார்.
அங்கு, திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் அவருக்கு தினகரன் அணி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில், சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். மாநில அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் உள்பட ஏராளமான நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
அங்கு செய்தியாளர்களுக்கு டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டி, "அரசியலுக்கு புதிதாக வரும் நடிகர்கள் தங்களை நிலைநிறுத்தி கொள்வதற்காக எம்.ஜி.ஆரை பற்றி புகழ்ந்து பேசுகிறார்கள். அந்த வகையில்தான் நடிகர் ரஜினிகாந்தும் பேசி இருக்கிறார்.
எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம். சில நேரங்களில் தி.மு.க.வினர் கூட எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசி இருக்கிறார்கள்.
தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாகவும், அந்த இடத்திற்கு நல்ல தலைவர் வரவேண்டும் என்றும் ரஜினிகாந்த் பேசி இருக்கிறார். யார் நல்ல தலைவர் என்பதை தேர்தல் நேரத்தில் மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தைரியத்தில் எச்.ராஜா பெரியார் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். அவர் தன்னைத்தானே தரம் தாழ்த்தி கொள்ளும் வகையில் நடந்து கொள்கிறார். அவருக்கு மக்கள் உரிய நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள்.
பெரியார் சாதி ஒழிப்பிற்காகவும், பிராமண ஆதிக்கத்திற்கு எதிராகவும் தனது இறுதிகாலம் வரை போராடினார். அதன் காரணமாகவே காழ்ப்புணர்ச்சியோடு அவரை பற்றி பா.ஜ.க.வினர் பேசுகிறார்கள்.
இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்தாலும், தமிழகத்தில் அவர்களால் ஆட்சியை பிடிப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இது திராவிட மண்.
திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது. தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறலாம், அல்லது தோல்வி அடையலாம். தோல்வி ஏற்பட்டதற்காக கம்யூனிஸ்டு கட்சியை திரிபுராவில் அழிக்க நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அவர் கூறினார்.