திமுக ஆட்சியின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் பலியாகினர்; இது வெறும் 13 தான் என்கிறாரா ஜெயக்குமார்?
மதுரை
திமுக ஆட்சியின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 60 பேர் பலியாகியுள்ளனர் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார் தூத்துக்குடி துப்பாக்கி சூடு அதைவிட குறைவு என்று நியாயப்படுத்துகிறார் போல.
மதுரை விமான நிலையத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், "தமிழகத்தில் ஒருபோதும் பயங்கரவாதத்திற்கு அனுமதி இல்லை.
மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுப்பிய நோட்டீஸுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் விளக்கம் அளிக்காததால், ஆலையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது துரதிர்ஷ்டவசமானது, வேதனையளிக்கிறது. இதனை நியாயப்படுத்தவில்லை.
திங்கள்கிழமை (அதாவது இன்று) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், நானும் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உள்ளோம்.
தூத்துக்குடியில் இணையதள சேவையை முடக்கியது வட மாநிலங்களில் உள்ள நடை முறையாகும். தற்போது, அங்கு இயல்புநிலை திரும்புகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேதுவது எரிகின்ற கொள்ளியில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் உள்ளது.
தமிழகத்தில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாது. அதனை அரசு அனுமதிக்காது. தமிழகத்தில் 1970, 1974, 1989,1991, 2006 மற்றும் 2011-இல் நடைபெற்ற திமுக ஆட்சியின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 60 பேர் பலியாகியுள்ளனர்" என்று அவர் கூறினார்.