தப்லீக் ஜமாத்துக்கு வந்த சட்ட விரோத பணம்... மவுலானா சாத் மீது வழக்கு..!
வெளிநாடுகள், உள்நாட்டிலுள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மூலம் தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சட்டவிரோதமாக நிதி வந்துள்ளதாக அமலாக்கப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
கொரோனா ஆரம்பித்து ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் காந்தவ்லி தலைமையில், டெல்லி நிஜாமுதீன் மர்கஸில் கடந்த மார்ச் மாதம் வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மூலம் ஏராளமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அவர்கள் மூலமாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவியதாக குற்றச்சாட்டு கிளம்பியது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் மீதும், அவருடன் தொடர்புடைய அறக்கட்டளைகள் மீதும் அமலாக்கப் பிரிவினர் நிதி முறைகேடு வழக்கு தொடர்ந்தனர். வெளிநாடுகள், உள்நாட்டிலுள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மூலம் தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சட்டவிரோதமாக நிதி வந்துள்ளதாக அமலாக்கப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக நேற்று மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையை நடத்தினர். ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தப்லீக் ஜமாத்துக்கு சிக்கல் எழுச்துள்ளது.