’விவேக் இந்த நெருக்கடியை தாங்குவானா?’: அக்ரஹார சிறையில் அழுது புரளும் இளவரசி...
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பு மூலம் சசிகலாவுடன் தனக்கு நான்காண்டு சிறைதண்டனை உறுதியான போது கூட இளவரசி இந்தளவுக்கு உடைந்து போகவில்லை ஆனால் சில நிமிடங்களுக்கு முன் குலுங்கியழ துவங்கியவர் தேறுவதற்கு வழியில்லாதவராய் தவித்து நிற்கிறார் பரப்பன சிறைக்குள்
காரணம்...?
செல்ல மகன் விவேக்கை வருமான வரித்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றிருப்பதுதான்.
போயஸ்கார்டனில் ஜெயலலிதா கம்பீரமாக அரசாண்டபோது அங்கே இளவசன் போல் வலம் வந்தவர் விவேக். ஜெ.,வுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை இஷ்டம். அதில் விவேக் ஆங்கிலம் பிய்ச்சு உதறும் அதிபுத்திசாலி பிள்ளை என்பதால் ஏக ஏக இஷ்டம். சசியும், இளவரசியும் கூட சில விஷயங்களில் ஜெ., முன்பு நின்று சில விஷயங்களில் அழுத்தம் கொடுத்து பேச தயங்குவார்கள். ஆனால் விவேக்கிற்கோ ஜெ.,விடம் இம்மியளவும் பயமிருந்ததில்லை. நேருக்கு நேராக நின்று வாதாடுவார் அதுவும் ஆங்கிலத்தில்.
விவேக்கின் சாதுர்யமான பேச்சை கேட்பதற்காகவே ஜெ., சில செல்லச்சீண்டல்களை விவேக்கிடம் நிகழ்த்துவார் என்பார்கள் கார்டனின் உள் விபரங்களை அறிந்தவர்கள். விவேக் அந்த நுனிநாக்கு ஆங்கிலத்தை கற்றுக் கொண்டது ஜெ.,விடம் தான். சின்னதாய் கோபப்படுத்தினாலும் கூட ஜெ.,விடமிருந்து ஆக்ஸ்போர்டே பிச்சையெடுக்குமளவுக்கு தரமான ஆங்கிலம் வந்து விழும் என்பது விவேக்கிற்கு தெரியும். அதனால் அந்த குறும்பை அவ்வப்போது செய்வார்.
விவேக் மீது ஜெயலலிதா அதிக அன்புடன் இருந்ததில் இளவரசிக்கு ஏக சந்தோஷம். தன்னை தாண்டி ஜெயலலிதாவிடம் யாருமே நெருங்கிவிட கூடாது, அன்பு காட்டிவிட கூடாது என்பதில் கடைசிவரை விடாப்பிடியாய் இருந்த சசிகலா விவேக் விஷயத்தில் மட்டும் விதிவிலக்காய் இருந்தார்.
விவேக்கின் சுட்டித்தனம், கெட்டிக்கார படிப்பு ஆகியவற்றில் மட்டுமில்லை மிக திறமையான நிர்வாக திறனிலும் ஜெ.,வுக்கு அதீத நம்பிக்கை இருந்தது. அதனால்தான் ஜாஸ் சினிமாஸ் நிர்வாகத்தில் நின்று விளையாட அனுமதித்திருந்தார். அவரும் அந்த நம்பிக்கையை கெடுக்காமல் இந்த சின்ன வயதில் மிக திறம்பட அந்த நிறுவனத்தை கொண்டு செலுத்தினார் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள். விவேக்கின் திருமணத்தில் ஜெ., பங்கேற்கவில்லை. உடல்நிலை ஆரோக்கியமாக இல்லை அதனால்தான் என்று வெளியில் கூறப்பட்டாலும், சுதாகரன் திருமணத்தை ஏற்று நடத்திய பின் தனக்கும் சசிக்கும் நேர்ந்த துன்பங்கள் ஜெயலலிதாவின் மனதில் நிழலாடின.
மிக மோசமாக பல ஆண்டுகள் விமர்சிக்கப்பட்ட, பலரது வாயில் பல ஆண்டுகள் விழுந்து கொண்டிருந்தது அந்த திருமணமென்பதாலேயே விவேக்கின் திருமணத்தில் கலந்து கொள்வதை தவிர்த்தார் ஜெ., என்கிறார்கள். திருமணம் முடிந்தபின் மாப்பிள்ளையும் பெண்ணும் ஓடோடி சென்று கார்டன் வீட்டில் ஜெயலலிதாவிடம் கண்ணீர் மல்க ஆசி வாங்கினார்கள். ஜெ., மறைந்தபோது விவேக் அழுததை கண்டு அந்த குடும்பமே மிரண்டது.
இப்படித்தான் ஜெயலலிதாவின் அன்புக் குழந்தையாகவே விவேக் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஜாஸ் சினிமாவோடு ஜெயா டி.வி. நிறுவனம், நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கை ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) விவேக் நுணுக்கமாக செயல்பட்டதை கண்டு அ.தி.மு.க.வின் எதிரணியே வியந்தது.
பொடிப்பையன் என்று எவராலும் தவிர்த்துவிட முடியாத விவேக்கை ஐந்து நாட்கள் அவரது சொத்துக்களில் வைத்து விசாரணை செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் தனி விசாரணை எனும் பெயரில் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
விவேக்கை சுற்றி ரெய்டு வலை நெருக்கமாக பின்னப்பட்டுக் கொண்டிருப்பதை முதல் நாளே இளவரசிக்கு தெரியும்.
‘சின்னப்பையன் இந்த நெருக்கடியை தாங்குவானா?’ என்று இளவரசி உடைந்திருக்கிறார். ஆனால் இன்று மாலையில் விசாரணைக்கு விவேக் அழைத்துச் செல்லப்பட்டதை கேள்விப்பட்டதும் பரப்பரன அக்ரஹார சிறைக்குள் இருக்கும் இளவரசி உடைந்து கதற துவங்கிவிட்டார் என்று சிறைத்துறை போலீஸ் வழியே வெளியே செய்தி பரவுகிறது.
விவேக்கை ஜஸ்ட் 1 மணி நேர விசாரணைக்கே அழைத்துச் சென்றுள்ளனர் என்கின்றனர். அதே நேரத்தில் அவர் கைது செய்யப்படலாம் என்றும் தகவல் பரவுகிறது. எதையும் உறுதியாக சொல்வதற்கில்லாத சூழல் இப்போது.
படிப்பு, நிறுவன நிர்வாகம், திருமணம், புகழ் வெளிச்சம் என்று சிறுவயதிலேயே எல்லாவற்றையும் மிக விரைவாகவே வாய்க்கப்பெற்ற விவேக் இப்படியொரு சர்ச்சை வட்டத்துக்குள்ளும் விரைவாகவே வந்துவிட்டார்!