Ilavarasi daughter kirusnapiriya pressmeet

வருமான வரித்துறை சோதனையின்போது என் வீட்டில் இருந்து எந்த ஆவணங்களும் எடுக்கப்படவில்லை என்றும், வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபடுவது வழக்கமான நிகழ்வுதான் என்றும் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா கூறினார்.

சசிகலா, தினகரன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என கடந்த வியாழக்கிழமை தொடங்கி 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனை நடத்தினர். கோடநாடு பங்களா, டீ எஸ்டேட் உட்பட சில இடங்களில் மட்டும் தொடர்ந்து வருகிறது.

187 இடங்களில் 1800 அதிகாரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த சோதனை, பல இடங்களில் முடிவடைந்துள்ள நிலையில் இளவரசியின் மகன் விவேக், முக்கிய பங்கு வகிக்கும் ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், ஜெயா டிவி அலுவலகம், விவேக்கின் மூத்த சகோதரி கிருஷ்ணபிரியாவின் வீடு, அவர் நடத்தி வரும் தொண்டு நிறுவனம், விவேக்கின் மற்றொரு சகோதரி ஷகீலா மற்றும் அவரது கணவர் முக்கிய நிர்வாகியாக இருக்கும் மிடாஸ் மதுபான ஆலை ஆகியவற்றில் 5 நாட்களாக சோதனை நடைபெற்றது. கிருஷ்ணப்ரியா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான சொத்து பத்திரங்கள்,
தங்க, வைர நகைகளை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இன்று விவேக்கின் சகோதரிகள் கிருஷ்ணபிரியா, ஷகீலா ஆகியோர் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர். இன்று காலை 11 மணியளவில் வருமான வரி அலுவலகத்தில் கிருஷ்ணபிரியா, ஷகீலா ஆஜராகினர். ஜெயா டிவியின் பொது மேலாளர் நடராஜனும் ஆகராகி உள்ளனர். அவரிடம் ஜெயா டிவி வரவு - செலவு கணக்குகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று கூறினார். வருமான வரித்துறையின் சோதனையில் அரசியல் எதுவுமில்லை என்று கூறிய அவர், வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபடுவது வழக்கமான நிகழ்வுதான் என்றும் கூறினார்.

வருமான வரித்துறை சோதனையின்போது என் வீட்டில் இருந்து எந்த ஆவணங்களும் எடுக்கப்படவில்லை என்றும் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா கூறினார்.