ஸ்டாலினை சந்தித்து துரோகம் செய்வதா? - கருணாஸ் மீது ஜெ.தீபா திடீர் பாய்ச்சல்
இரட்டை இலையில் வென்று விட்டு மு.க.ஸ்டாலினை கருணாஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் சந்திப்பது துரோகம் என்று ஜெ.தீபா கண்டனம் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளரான ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
இரட்டை இலை சின்னம் மூலம் வெற்றி பெற்ற 3 எம்.எல்.ஏ.க்கள் திடீரென மு.க ஸ்டாலினை சந்திக்கிறார்கள். டி.டி.வி. தினகரனை பார்க்கிறார்கள். சிறையில் சசிகலாவை சந்திக்கிறார்கள். சந்து முனையில் சிந்து பாடுகிறார்கள். மு.க.ஸ்டாலினை இந்த எம்.எல்.ஏ.கள் சந்தித்து, வைத்த கோரிக்கை ஜெயலலிதாவுக்கு செய்த துரோகமாகும்.
2009–ம் ஆண்டு ஈழத்திலே லட்சக்கணக்கான தமிழர்கள் ராட்சத குண்டுகள் மூலம் கொல்லப்படுவதற்கு துணை போன காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?.
தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்த போது தான் பிரபாகரனின் தாயார் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு விமானத்தில் வந்த போது, அவரை வந்த விமானத்திலேயே திருப்பி விரட்டி அனுப்பிய கூட்டம் தான் தி.மு.க. என்பதை ஸ்டாலினை சந்தித்த மூன்று எம்.எல்.ஏ.கள் மறந்து விட்டார்களா?.
மத்திய காங்கிரஸ் ஆட்சியில் பங்கெடுத்தும் தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த தி.மு.க., நளினி விடுதலை பற்றி சிந்தித்தது உண்டா?பேரறிவாளன் பரோல் பற்றி நினைத்து பார்த்தது உண்டா?. துணை முதல்–அமைச்சராக இருந்த மு.க ஸ்டாலின் துடி துடித்தது உண்டா?.
ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க எம்.ஜி.ஆர் பல கோடிகளை அள்ளி கொடுத்தார். ஜெயலலிதா சட்டசபையை கூட்டி பல்வேறு சிறப்பு தீர்மானங்களை நிறைவேற்றினார். இலங்கை மீது பொருளாதார தடை போன்ற தீர்மானங்களை ஜெயலலிதா முன்மொழிந்தார்.
இவ்வாறு தீபா தனது அறிக்கையில் ஸ்டாலினுக்கும் , மூன்று எம்.எல்.ஏக்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.